tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : காமராசர் நினைவு நாள்

காமராசர், 1903  சூலை 15-ல் விருதுநகரில் பிறந்தார். இளம் வயதிலேயே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் தலைவரானார்.  1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார்.இவர் ஒன்பதுஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவிவகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். 

ஒருவருக்கு ஒரு பதவி எனும் திட்டத்தை அவர் முன்வைத்ததால் அந்ததிட்டம் கே-பிளான் என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்துஅவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். அவர் காங்கிரஸ்தலைவராக இருந்தபோது தில்லியில் அவர் மீது இன்றைய பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தினர் தாக்குதல் தொடுத்தனர். அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். நேருவின் மறைவுக்குப் பின் காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழகஅளவில் சுருக்கிக் கொண்டார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினைஅமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த மனக்குறையும் கவலையும் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

\அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்தநாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே (1975 அக்.2) உயிர் துறந்தார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் முனையம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


===பெரணமல்லூர் சேகரன்====